தலை கனத்திற்கு மருந்தாகும் சுக்கு!

தலை கனத்திற்கு மருந்தாகும் சுக்கு!
முள் குத்தி வலி எடுத்தால்:

இரும்பு, முள் அல்லது கண்ணாடி குத்தி வேதனை இருந்தால் மிளகாய் வற்றல் 4 அல்லது 5, அம்மியில் வைத்து தண்ணீர் தெளித்து மசிய அரைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் விழுதைப் போட்டுக் கிளறவும். வதக்கி கலர் சற்று மாறியதும், ஒரு சுத்தமான துணியில் அதைத்தட்டி வேதனை உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துவிட்டு அப்படியே அதை துணியுடன் வைத்துக் கட்டி விடவும். அல்லது வெங்காயத்தை உப்பு மஞ்சள் சேர்த்து தட்டி ஒரு கரண்டியில் நல்லெண்ணெயைக் காய வைத்து துணி முடிப்பை அதில் முக்கி இளம் சூட்டில் ஒத்தடம் கொடுத்து அதையே கட்டி விடவும்.


தலை வலிக்கு:

மிளகைப் பாலில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போடவும். கை, கால்களை நீட்டி சவாசனம் செய்வது போல் உடல், மனம் இரண்டையும் நன்கு அமைதியுறச் (relax) செய்து ஐந்து நிமிடம் படுத்து எழுந்தால் தலைவலி குணமாகும்.

இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் பயத்தமாவு அரப்புத்தூள் தேய்த்துக் குளிக்கவும்.

தலைச் சுற்றலுக்கு:

முருங்கை இலைக் கொழுந்தைத் தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப்போடவும். சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சம் வேர், கிராம்பு இவைகளை வகைக்கு 5 கிராம் எடுத்து சூரணமாக்கி, தினம் இரண்டு வேளை சாப்பிடவும்.

தலை கனத்துக்கு:

சுக்குப் பற்றுப் போடலாம். வசம்பு பற்றுப் போடலாம். வால்மிளகை சுடு நீரில் அரைத்துப் பற்றுப் போடலாம்.

அஜீரணம் அகல:

ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். அல்லது ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். அல்லது சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும்.

ஆறாத ரணங்களுக்கு:

மஞ்சளைச் சுட்டு பொடி செய்து காலையிலும், மாலையிலும் தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் பூசவும். அல்லது மருதாணி எண்ணெய் போடலாம்.

இருமலுக்கு:

வால் மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு சிறிது மட்டுமே). துளசியிலை இவற்றை அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம்.

உடல் வலி தீர:

துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும்.

உடல் அழகுற:

ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் 1 தேக்கரண்டி தேன் விட்டுப் பருக ஒரு மண்டலத்தில் உடல் தேஜஸ் பெறும்.

தொண்டை கட்டி குரல் பேச எழும்பாவிடில்:

சுண்ணாம்பை கால் பெருவிரலில் தடவவும். அல்லது மஞ்சள், சுண்ணாம்பு, தேன் மூன்றையும் மசித்து கழுத்தில் தடவவும். அல்லது உப்பும், வெந்நீரும் கொண்டு இரண்டு மூன்று முறை கொப்பளிக்கவும்.

மூக்குச்சளியை விரட்ட:

சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும்.

கருத்துகள்