காது வலிக்கு நல்ல மருந்து ஆலிவ் எண்ணை!

காது வலிக்கு நல்ல மருந்து ஆலிவ் எண்ணை!
பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரிந்தவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

வறட்டு இருமல்:

வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா:

தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்கு:

அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே.

அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா:

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

தலை முடி பிசுபிசுப்புக்கு:

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.

சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.

கருத்துகள்