குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள்!

குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள்!
'டிவி' பார்த்து 'லேங்வேஜ்' கத்துக்கறா எம் பொண்ணு... என, பெருமையாகப் பேசுபவர்களா நீங்கள்? 'டிவி' பார்த்தால், மொழி பழகிடுமா? காண்பது அனைத்தையும் கற்கும்திறன் யாருக்கு அதிகரிக்கிறது? எல்லா கேள்விகளுக்கும் இதோ விடை:
குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி:
குழந்தைகளின் மூளைத் திறனை வளர்க்க, கல்வி தொடர்பான 'டிவிடி' க்களை போட்டு அதன் முன், அவர்களை அமர்த்தும் பெற்றோரா? இதை கவனமாக படிங்க... இவ்வாறான மூளைத் திறன் மேம்பாட்டு திட்டங்களால், குழந்தைகளின் மொழி அறிவு வளர்ச்சியடையாது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், கல்வி தொடர்பான 'டிவிடி'க்களை பார்க்கும் குழந்தைகளை விட, மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை 'டிவி' போன்றவற்றை பார்க்க வைப்பதை விட, சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழலாம்.

மூளை ப்ரஷ்ஷாக இருக்க குட்டித் தூக்கம் அவசியம்!
பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுவதால், மூளை மற்றும் அதன் தகவல் கிரகிக்கும் திறன் ஆகியவை புத்துயிர் பெறுகிறது. இதுகுறித்த ஆய்வில், பிற்பகல் வேளைகளில் குட்டித் தூக்கம் போடுபவர்களை விட, தூங்காதவர்களிடம் கற்றல் திறன் 10 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபகத் திறன் தொடர்பான நடைமுறைகளில், தூக்கம் முக்கிய பங்கு வகிப்பது தான் இதற்கான காரணம். படித்த பின் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஆனால், தூங்கி எழுந்த பின் ஒன்றை கற்றுக் கொண்டால், அது தொடர்பான தகவல்கள், மூளையில் எளிதாக பதியும்.
தாய்ப்பால் கொடுத்தால் தாய்-சேய் நலம் பராமரிக்கப்படும்:
தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு, வளர்ச்சிதை மாற்ற குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைவு என, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்ட பெண்கள், நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதால், அவர்கள் பெருமளவில் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதோடு, வயிற்றில் கொழுப்பு சேர்வதும் குறையும்.
குண்டு குழந்தைகளா? உஷார்!
அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் கூடிய மூன்று வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், அதிக உடல் எடையுடன் காணப்படும் குழந்தைகளின் ரத்தத்தில் 'வைட்டமின் சி'யை ஏற்றுக் கொள்ளாத புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது; இதனால், இதய நோய், ஞாபக மறதி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பான எடையுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் (ஒபிசிட்டி) காணப்படும் 40 சதவீதம் குழந்தைகளின் ரத்தத்தில் 'வைட்டமின் சி'யை ஏற்றுக் கொள்ளாத புரதச்சத்து அதிக அளவு காணப்படுகிறது.

கருத்துகள்