பொடுகுக்கு டாட்டா!

பொடுகுக்கு டாட்டா!
* மூன்று கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலைகளை நன்றாக கழுவி, பசை மாதிரி அரைத்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து குளியுங்கள்.

* 100 கிராம் சித்தாமுட்டி வேரை எடுங்கள். இதில் 400 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். இது 100 மிலி ஆகும்வரை சுண்ட காய்ச்சுங்கள். பிறகு லேசாக ஆறவைத்து அதைதலையில் தேய்த்துக் குளியுங்கள்.


* அதிமதுரம் 50 கிராம், விதை நீக்கிய நெல்லிக்காய் 50 கிராம் நீலி இலை மூன்று கைப்பிடி அளவு... இவை மூன்றையும் கலந்து நன்றாக அரைத்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக தலையில் தேயுங்கள் ஊறிய பிறகு குளியுங்கள்.

* பொடுகு, முடி உதிர்தல், இளநரை... இந்த மூன்று பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு இருக்கிறது இந்த எண்ணெயில். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்...

* மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலை, நீலி இலை.... இவை ஒவ்வொன்றையும் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, நன்றாக அரைத்து சாறு பிழிந்து தனியே வையுங்கள். நெல்லிக்காய் வற்றல், அதிமதுரம், கடுக்காய்.... மூன்றையும் தலா 50 கிராம் எடுத்து, இவற்றுடன் 600 மி.லி தண்ணீர் சேர்த்து அதை 150 மி.லி. ஆகும் வரை சுண்டக் காய்ச்சி கஷாயமாக்குங்கள்.

இந்த கஷாயத்துடன், ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இலைச்சாறு 200 மி.லி சுத்தமான பால், 200 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் காய்ச்சுங்கள். தண்ணீர் மொத்தமும் வற்றி, வெறும் எண்ணெய் மட்டும் மிஞ்சும் வரை காய்ச்சுங்கள்.



இந்த எண்ணெய், கூந்தல் பிரச்னைகளுக்கு அற்புதமான நிவாரணி!
*********************************************************************
உடல் பருமனும் முக்கால் வயிறு உணவும்
நமக்கு வேலை செய்யும் திறனுக்கு ஏற்றார் போல் குறிப்பிட்ட அளவு கலோரிகள் உடலுக்குத் தேவை. அவை அதிகரித்தால் அந்தச் சக்தி கொழுப்புத் திசுக்களாக அடிபோஸ் தசையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது நமது வயிற்றின் முன் பகுதி, புட்டம், மார்பகம் முதலிய இடங்களில் சேமிக்கப்படுகிறது.

நமது உணவுப்பழக்கங்களில் சிறு மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கூட்டு உணவுப் பழக்கம் அதாவது, குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடும் முறை குறைந்து, குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் நெடுநேரம் உண்ணும் உணவின் அளவு தெரியாமலேயே உண்கிறார்கள். இன்று பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சி வகுப்புகளும் குறைந்துவிட்டன. பெரும்பாலான கல்விக்கூடங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.

வேலைத் திறனுக்குத் தகுந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலையைச் செய்து வரும் வியாபாரிகளும் பருமனாக வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு சரியான உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் தாய்மார்களுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர மன அழுத்தம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்க நினைத்து சாப்பிடுவதில் சுகம் காணுகிறார்கள். மரபு வழியாக உடல் பருமனாவது உண்டு. சில சமயம் நாளமில்லாச் சுரப்பிகளில் இருந்து வரும் இயக்குநீர் அதிகரிப்பதாலோ, குறைவதாலோ இது ஏற்படலாம்.

உடல் பருமன் உள்ளவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். அதிக ஓய்வை அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையைத் தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். காலையிலோ மாலையிலோ நடக்க வேண்டும். பகல் தூக்கம் அதிக அளவில் இருக்கக்கூடாது.

உடல் பருமனைக் குறைக்காவிட்டால் நடப்பதில் சிரமம் ஏற்படலாம். விளையாட்டுகளில் பங்குபெற முடியாது. இவர்கள் சீக்கிரம் களைத்துவிடுவர். சிறிது தூரம் நடந்தாலே மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கும். நீரிழிவு, இரத்த அழுத்தப் பாதிப்பு, அதிரோஸ்கிலிரோசிஸ், வெரிகோஸ் சிரைகள் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படலாம். இவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் சில கஷ்டங்களும் ஏற்படும்.

உட்கார்ந்து வேலை செய்பவர்களில் பெரும்பாலோருக்கு உடல் பருமனாக வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம் ஜரிபுட், துரித உணவு ஆகியவை கிடையாது. தற்பொழுது பெரியவர்களும், குழந்தைகளும் இவற்றை அதிகமாக உண்ணுகிறார்கள். கொழுப்புச் சத்து சுவையை ஊட்டுவதால் பலரும் தேவையான கலோரியைத் தாண்டி உண்கிறோம்.

உடல் நலம் ஒரு செல்வம் என்று சொல்வார்கள். முக்கால் வயிறு உணவே சிறந்தது.

கருத்துகள்