சனி, 8 அக்டோபர், 2016

சுவைகளின் பலன்கள்....

சுவைகளின் பலன்கள்....
கசப்புச் சுவை:

கசப்புச் சுவை நாக்கின் ருசியின்மையைப் போக்கும். உடலில் நஞ்சு, கிருமி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், காய்ச்சல், எரிச்சல், நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு போன்ற நோய்களை நீக்கும். வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டும். உடலிலுள்ள தோஷங்களையும், மலங்களையும் வழித்து வெளியேற்றும். தாய்ப்பால், தொண்டை இவற்றைச் சுத்தம் செய்யும். மலம், கபம், சிறுநீர், பித்தம் இவற்றை உலரச் செய்யும். மஞ்சள், பாகற்காய், மணத்தக்காளி ஆகியவை கசப்புச் சுவை கொண்டவை. அளவுக்கு மீறினால் தாதுக்கள், பலம் இவற்றைக் குறைத்து விடும். மயக்கம், சோர்வு, தலை சுற்றல், வாத நோய், வரட்டுத் தன்மை, சொரசொரப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.


காரம்:

உடலில் கபத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை வளர்க்கும். புண்களை ஆற்றும். உடலைச் சுத்தப்படுத்தி புலன்களைத் தெளியச் செய்யும். உறைந்த ரத்தத்தை உடைக்கும். வீக்கம், பருமன், கிருமி நோய், தொண்டை நோய், நஞ்சு, தோல் நோய், அரிப்பு இவற்றைத் தணிக்கும். பெருங்காயம், சுக்கு, மிளகு, கடுகு, துளசி, வெற்றிலை போன்றவை காரச் சுவையுள்ள பொருட்கள். அதிகம் உட்கொண்டால் நாவறட்சி, மயக்கம், வெறி, வாந்தி, உடல் களைப்பு, விந்து உலர்தல், நடுக்கம், தலைசுற்றல், உடலை இளகச் செய்தல் போன்றவை ஏற்படும். கை & கால்கள், விலாப் பக்கம், முதுகு, இடுப்புப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை உண்டுபண்ணி, குத்தல் வலி, சுருக்கம், உடைப்பது போன்ற வலியை உண்டாக்கும்.

துவர்ப்பு:

கடுக்காய், அருகம்புல், நாவல், அத்தி, ஆல், இலந்தை, பாக்கு, விளாங்காய் ஆகியவை துவர்ப்புச் சுவை கொண்டவை. கபம், பித்தம், ரத்தம் ஆகிய மூன்றில் ஏற்படும் தோஷங்களை அழிக்க வல்லது. குளிர்ச்சி வீரியமுடையது. ஜீரணிப்பது கடினம். தோலின் நிறத்தை சரி செய்யும். புண்களை ஆற்றும். உடலில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். மலத்தைக் கட்டுப்படுத்தும். இதை அதிகம் உபயோகித்தால், நா வறட்சி, வயிற்றுப் பொருமல், கால்கள் தடித்து அசைவற்றிருப்பது, இளைப்பு, பாரிச வாயு ஆகிய நோய்களைத் தோற்றுவிக்கும். ஆண்மையையும் அழிக்கும்.

இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவை உணவிலும், கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவை சிகிச்சையிலும் முதலிடம் வகிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக